புகழாரங்களும் பொன்னாடைகளும் மட்டும்
கலைஞர்களையும் கலைக ளையும்
மேம்படுத்தாது.-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற
உறுப்பினர் சந்திரகுமார்.
மேடைகளில் வழங்கப்படுகின்ற புகழாரங்களும் பொன்னாடைகளும் மட்டும் எமது சமூகத்தின் கலைஞர்களையும் கலைகளையும் மேம்படுத்தாது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையினால் நடாத்தப்பட்ட பண்பாட்டு விழா 2011 முதல் நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கலைஞர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பணி மகத்தானது ஆனால் அந்த சமூகத்தில் அந்த கலைஞர்கள் தான் இன்று பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். கலைஞர்களை வறுமையில் வைத்துக் கொண்டு கலைகளையும் கலாசாரங்களையும் வளர்த்தெடுக்கலாம் என்பது சாத்தியமற்ற விடயம். எனவே செழுமை மிக்க ஆரோக்கியமான கலைகளையும் கலாசாரங்களையும் எமது சமூகம் கொண்டிருக்க வேண்டுமானால் கலைஞர்களின் பொருளாதாரம் செழுமைமிக்கதாக மாற்றப்பட வேண்டும் என்றும் கிளிநொச்சி மாவட்டம் அதற்காக ஒரு திட்டத்தை வகுத்து செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதிர்ந்த கலைஞர்களிடம் இருந்து இந்த சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு. அதே வேளை வளர்ந்து வரும் கலைஞர்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் எமது சமூகத்திற்கே உண்டு. எனவே அது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்தும் நடத்த வேண்டும் கடந்த நெருக்கடியான காலங்களில் கலை கலாசாரங்களை பாதுகாத்தது போன்று எதிர்காலத்திலும் எம் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறினிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாவட்ட செயலக திட்டப் பணிப்பாளர் மோகனபவன் தலைமைபீட உதவி அரச அதிபர் ஜெயராணி உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கேதீஸ்வரன் கௌரிதாசன் பிரதேச செயலகர்களான நாகேஸ்வரன் முகுந்தன் வசந்தகுமார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.