பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலாக
ஒலித்தவர் சிவதாசன்-ஈ.பி.டி.பி.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர் தோழர் சிவதாசன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 13ம் திகதி காலமான ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் தொழிற்சங்க வாதியுமான தோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் இறுதி நிகழ்வு மாவிட்டபுரம் நகுலேஸ்வரம் கடற்கரையில் நடைபெற்ற போது அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தோழர் சிவதாசனின் விருப்பத்திற்கமையவே இவரது இறுதி நிகழ்வுகள் இங்கே நடைபெறுவதாகவும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணி புரிந்த இவர் ஈ.பி.டி.பி.யின் முக்கிய பொறுப்புக்களை வகித்தார் என்றும் சிறுவயது முதல் இடதுசாரிகளின் கொள்கையில் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றும் இவரது இழப்பு ஈ.பி.டி.பி.க்கு பேரிழப்பு என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர் தோழர் சிவதாசன் அவர்கள் என்று சுட்டிக் காட்டிய சந்திரகுமார் அவர்கள் தென் இலங்கை அரசியல் வாதிகளின் விருப்பத்திற்குரியவராகத் திகழ்ந்த இவர் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர் என்பதுடன் மாவிட்டபுரம் பகுதியிலுள்ள இரண்டு கோவில்களை புனரமைப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டார் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே ஈ.பி.டி.பி.யின் யாழ் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இறுதிக் கிரிகை நிகழ்விற்கு ஈ.பி.டி.பி.யின் நிர்வாகச் செயலாளர் இராசமாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றும் போது ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகத் திகழ்ந்த தோழர் சிவதாசன் அவர்கள் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகவும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவும் இருந்து தமக்கான கடமைகளை சிறப்புறச் செய்தவர் என்றும் தெரிவித்த அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மாபெரும் சக்தியாக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
மரணத்தை வென்றதொரு மாபெரும் மனிதர்தான் தோழர் சிவதாசன் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் கமல் உள்ளிட்ட ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் கல்வித்துறை சார்ந்தோர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் தோழர் சிவதாசன் அவர்களின் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க தமது இறுதி வணக்கத்தைச் செலுத்தினர்.